ஞாயிறு, 13 பிப்ரவரி, 2011

உணர்வாய் தீ


வெட்கி தலைகுனிகிறேன் என்னை நினைத்து.

ஒரு தனி மனிதனின் உணர்ச்சிகள் "வெடித்ததன்" விளைவாய் ஒரு தேசத்தின் தலையெழுத்தே மாறுகிறது எகிப்தில்.

இங்கே முத்துகுமாரின் மரணத்துக்கு விடை தேட முடியாமல்

இன்னும் நான் மிஷ்கின் "எதை" களவாடிருப்பார் என்று தேடுகிறேன்.

தினம் ஒருவனாய் சாகும் என் மீனவனின் வாழ்வாதாரத்தை நிலைபடுத்த முடியாமல்

இன்னும் நான் என் ரசனையை ஆடுகளத்தின் "யாத்தே"வில் நிலைபடுத்தி லயிக்கிறேன்.

"யார் ஆட்சியில் எத்தனை மீனவர்கள் இறந்தார்கள்?" என்று கணக்கு சொல்லி மார்தட்டி கொள்ளும் பிணம்தின்னி கழுகுகளின் கொட்டத்தை அடக்க முடியாமல்

யார் யாரோடு கூட்டு சேர்வார் என்று என் தீர்க்கதரிசன திறமையை பரிசோதித்து கொள்கிறேன்.

கோடிகளாய் ஊழல்கள்.

அடுத்து யாரை கைது செய்வார்கள் என்று நகம் கடித்து பார்க்கிறேன் ஒரு திரைப்படத்தை பார்க்கும் ஆவலோடு.

வீதிக்கொரு சிலை திறக்கும் மாநிலம் என் தேசத்தில் இருக்கிறது

செருப்பு துடைத்து விட அதிகாரிகள் இருக்கிறார்கள்.

அதையும் சாதிமயமாக்க,பெண்ணியமாக்க என் நண்பர்கள் இருக்கிறார்கள்.

செத்த பிணத்தை கரைக்கு கொணர கடற்படை இருக்கிறது.

உயிர் இருந்தும் பிணமாய் அலையும் தலைவர்களை தட்டி கேட்க நான் படை அமைக்கவில்லை.

அடிப்படை வாழ்வுக்கு உயிரையும் மானத்தையும் விலைக்கு விற்கும் நிலைமை எனக்கு.

ஆயினும் விலை இல்லாமல் வாங்கிய வண்ணதொலைக்காட்சி உவகை அளிக்கிறது.

ஒரு முகமது தீ குளித்தான்..

அந்த தேசத்தின் தலைவன் பதவி இழக்கிறான்..

ஒரு முத்துகுமார் இறந்தான்..

உடலை சொந்தம் கொண்டாட உள்ளடி அரசியல் நடந்தது..

மல்லாந்து படுத்து காறி உமிழ்ந்து கொள்கிறேன்...

எப்பொழுது உணர்வேன்? அந்த நெருப்பின் சூட்டை..

சுயவிடுதலை செய்துகொண்ட எகிப்து மக்கள் உணர்ந்த அந்த தீக்குளிப்பின் சூட்டை..

எப்பொழுது உணர்வேன்? அந்த எழுச்சியை..

பினந்தின்னிகளிடமிருந்து விடுபட..

முடிவுறா கேள்விகள் மூளையை தின்ன...

விடை காண முயல்கிறேன் மானாட மயிலாடவில்.........

- லகுடபாண்டி

செவ்வாய், 8 பிப்ரவரி, 2011

யுத்தம் செய்.....விமர்சனம் அல்ல


பொதுவாக சினிமா விமர்சனம் செய்வதில் பெரிய ஈடுபாடு இல்லை.

அதற்கு முக்கிய காரணம்: எப்பொழுதும் சினிமாவை சந்தர்ப்ப சூழ்நிலையின் தாக்கத்தோடு உணர்ச்சிகரமாய் அணுகியே பழக்கபட்டுவிட்டேன்.


அதனால் நடுநிலையான பார்வையோடு ஒரு படத்தை அணுகுவது அவ்வளவு சுலபமாக இல்லை. எனினும் கடந்த மூன்று வருடங்களாய் ஒரு நாளில் மூன்று வேலை உணவு இருக்கிறதோ இல்லையோ கண்டிப்பாக இரவு ஒரு படம் பார்ப்பது சர்வ நிச்சயமாகி போனது.


ஒரு சின்ன பிளாஷ்பேக்:

"போக்கிரி" - படம் வெற்றிகரமாக ஓடி கொண்டிருந்த சமயத்தில், வீட்டில் அனைவருக்கும் டிக்கெட் எடுத்து கொடுத்து படம் பார்க்க அனுப்பி வைத்தேன். படம் பார்த்துவிட்டு வந்த என் அப்பா என்னிடம்............




"காவல்காரன்" படத்தில் எம்ஜியார்,


"காக்கிசட்டை" படத்தில் கமல்ஹாசன்,


"பாண்டியன்" படத்தில் ரஜினி,


"போக்கிரியில்" விஜய்.

எத்தனை வாட்டி தான் இதே கதையை பாக்றது.

இந்த லட்சணத்துல தெலுங்கு ரிமேக்னு வேற சொல்லிகிறாங்க. "

என்று அலுத்து கொண்டார்.

அப்பொழுது நன்றாக உரைத்த விஷயம் கண்டிப்பாக ஏதாவது ஒரு "புத்தகம், திரைப்படத்தின்" பாதிப்பு இல்லாமல் புதியதாய் ஒரு படம் எடுப்பதற்கான சாத்தியம் குறைவு என்பது.

இதுவும் ஒரு காரணம் - பார்த்த சினிமாக்களை விமர்சிக்காமல் இருப்பதற்கு.

இதையெல்லாம் தாண்டி இந்த படத்தை பற்றி எழுத காரணம் மிஷ்கின்.


நிறைய பேர் அவரின் இந்த படத்தில் சிலாகித்து சொன்ன விஷயம், தரம் வாய்ந்த படைப்பை அளித்து அதில் தன் பெயரை எங்கேயும் சுட்டி கொள்ளாமல் இருக்கிறார் என்று.

இங்கே தான் தொக்கி நிற்கிறது கேள்வி?

யுத்தம் செய் :   





சந்தேகமே இல்லாமல் அனேக பதிவர்கள் விமர்சித்தது போல மிக சிறந்த மேக்கிங்.

எனினும், கதை பற்றி சொல்லியே ஆக வேண்டும். 


Memories of Murder, ஹாஸ்டல், சா மற்றும் ஈசன் படங்களை ஒட்டி இருப்பதாக சொல்லப்பட்டுவிட்டது.

யுத்தம் செய்யில் நான் பார்த்த படங்களின் பாதிப்புகள்:




8MM - நிக்கோலஸ் கேஜ் நடித்த படம். 8MM படத்தின் பாதிப்பு யுத்தம் செய் கதையில் முக்கிய கருவாய் கையாள(களவாட)பட்டிருப்பது போல் தெரிகிறது. 




அலிபாபா - கிருஷ்ணா நடித்தது . 


நந்தலாலா அனுபவத்திற்கு பின் மிஷ்கின் தன் பெயரை சாமர்த்தியமாக இதில் தவிர்த்திருக்கிறார் என்றே தோன்றுகிறது.

ஒரு சில பழைய படங்களின் பாதிப்புகள் இல்லாமல் ஒரு புது படம் எடுப்பது மிகுந்த சிரமம் என்று என்னை போலவே மிஷ்கின்னும் நம்புகிறாரோ?



- லகுடபாண்டி